கணவரை கொன்று தூக்கில் போட்டு நாடகமாடிய மனைவி கைது

பிம்பிரி சிஞ்ச்வாட்டில் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவரை கொன்று தூக்கில் போட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
புனே,
பிம்பிரி சிஞ்ச்வாட்டில் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவரை கொன்று தூக்கில் போட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கரும்பு வெட்டும் தொழிலாளி
பர்பானி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் தொழிலாளிக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டு வந்தனர். கடந்த 6-ந்தேதி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக வாகட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரித்தனர். இதில் கணவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், கயிற்றில் இருந்து உடலை மீட்டு கீழே வைத்திருப்பதாக தெரிவித்தார்.
மனைவி கைது
இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் தலையில் பலத்த காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனால் போலீசார் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கொலை செய்து விட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






