கொரோனா வைரஸ் பாதிப்பு: ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க முடிவு? - ஜப்பான் பிரதமர் சூசக தகவல்


படம்: AP
x
படம்: AP
தினத்தந்தி 23 March 2020 6:34 AM GMT (Updated: 23 March 2020 11:43 PM GMT)

ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாதது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல நாட்டு ஒலிம்பிக் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகளும் இந்த போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்றும் போட்டியை திட்டமிட்டபடி நடத்தி விடலாம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், போட்டி அமைப்பாளர்களும் நினைக்கிறார்கள். ஆனால் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பது தான் சரியானது என்று பல்வேறு நாடுகளில் இருந்தும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக கனடா மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் போட்டி அமைப்பாளர்களுக்கு அதிக நெருக்கடி உருவாகி இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து எல்லா அம்சங்கள் பற்றியும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரிடமும் முழுமையாக ஆலோசனை நடத்தி 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்து இருந்தது. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்கலாம் ஆனால் ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சூசகமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் நேற்று பேசுகையில், ‘முழுமையான ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பதில் ஜப்பான் உறுதியாக இருக்கிறது. இது கடினமானால், விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டியை தள்ளிவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால் போட்டியை ரத்து செய்யும் திட்டம் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தாவிடம் கேட்ட போது, ‘கொரோனாவினால் ஏற்பட்டு வரும் தாக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் பொறுத்து இருந்து நிலைமையை பார்ப்போம். அதன் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் கொரோனாவின் பாதிப்பு மோசமாக இல்லை’ என்று பதிலளித்தார்.


Next Story