கொரோனா அச்சம் : சார்லார்லக்ஸ் ஓபனில் முழு இந்திய ஆண்கள் அணியும் தனிமைப்படுத்தப்பட்டது


கொரோனா அச்சம் : சார்லார்லக்ஸ் ஓபனில் முழு இந்திய ஆண்கள் அணியும் தனிமைப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 30 Oct 2020 1:22 AM GMT (Updated: 30 Oct 2020 1:22 AM GMT)

பேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து மேலும் இரு வீரர்கள் விலகி உள்ளனர்.

சார்புருக்கென், 

சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் கடைசி நேரத்தில் விலகினார். அவரது தந்தையும், பயிற்சியாளருமான டி.கே. சென்னுக்கு அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் வேறுவழியின்றி விலக நேரிட்டது. இந்த நிலையில் பயிற்சியாளர் மற்றும் லக்‌ஷயா சென்னுடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் ஆகியோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஜெயராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போது எங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால் எங்களுக்குரிய உணவு உள்ளிட்ட விவரங்கள் எதையும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்ததற்கான மருத்துவ சான்றிதழ் உள்ளது. கொரோனா அறிகுறியும் இல்லை. ஜெர்மனியின் உள்ளூர் அதிகாரிகளை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இங்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து உடனடியாக தாயகம் திரும்ப வாய்ப்பு உண்டா? என்பதை அறிய விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஜெர்மனியில் இந்த இரண்டு வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தும் நாட்களுக்கான செலவுத் தொகையை வழங்குவதாக இந்திய விளையாட்டு ஆணையம் உறுதி அளித்துள்ளது.

Next Story