சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என நிரூபித்து உள்ளேன்: பவீனா பட்டேல் பேட்டி


சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என நிரூபித்து உள்ளேன்:  பவீனா பட்டேல் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2021 2:52 AM GMT (Updated: 28 Aug 2021 2:52 AM GMT)

இந்திய வீராங்கனை பவீனா பட்டேல், சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளேன் என பேட்டியில் கூறியுள்ளார்.


டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதனை தொடர்ந்து, காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட்  கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

இதன்பின் நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவீனா பென் பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கான பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

ஒரு கட்டத்தில் முதல் செட்டை சீன வீராங்கனை 11-7 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்தடுத்த செட்களை திறம்பட விளையாடி பவீனா இறுதி போட்டிக்கு சென்றுள்ளார்.

டோக்கியோ பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள  இந்தியாவின் பவீனா பட்டேல்  சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளேன் என அரையிறுதி வெற்றிக்கு பின் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நான் இறுதி போட்டிக்கு செல்வேன் என்று நினைத்தது இல்லை.  100 சதவீதம் விளையாடினேன்.  இறுதி போட்டிக்கு மனதளவில் தயாராக உள்ளேன்.  இதுபோன்று தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் தங்க பதக்கம் வெல்வேன் என்று கூறியுள்ளார்.


Next Story