வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 635 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 191 புள்ளிகள் முன்னேறியது


வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 635 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 191 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 10 Jan 2020 10:14 AM GMT (Updated: 10 Jan 2020 10:14 AM GMT)

வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.

மும்பை

வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 191 புள்ளிகள் முன்னேறியது.

பங்குகளில் முதலீடு

அன்னிய முதலீட்டு நிலவரங்கள் திருப்திகரமாக இருந்தன. உள்நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளில் அதிக முதலீடு செய்தன. மற்ற நாடுகளில் பங்கு வியாபாரம் முன்னேறியதும் இங்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. நிதி நிலை முடிவுகள் சீசன் ஆரம்பமாகி உள்ள நிலையில் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றிய எதிர்பார்ப்புகளும் பங்குச் சந்தைகளை ஏற்றம் காணச் செய்தன.

அந்த நிலையில், மும்பை சந்தையில் தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டு எண் தவிர அனைத்து குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அதில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.83 சதவீதம் ஏற்றம் கண்டது. அடுத்து மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் 2.64 சதவீதம் உயர்ந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 4 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ் இந்த் வங்கி, மாருதி சுசுகி, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட 26 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக்னாலஜிஸ், என்.டி.பி.சி., சன் பார்மாசூட்டிக்கல்ஸ் ஆகிய 4 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 634.61 புள்ளிகள் அதிகரித்து 41,452.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,482.12 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,175.72 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1820 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 752 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 208 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,212 கோடியாக குறைந்தது. கடந்த புதன்கிழமை அன்று அது ரூ.3,823 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 190.55 புள்ளிகள் முன்னேறி 12,215.90 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,224.05 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,132.55 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story