செவிலியர் உருவாக்கும் 'ஆரோக்கிய சூப்'


செவிலியர் உருவாக்கும் ஆரோக்கிய சூப்
x

அரபு அமீரகத்தில் செவிலியராக பணியாற்றிய இங்கிலாந்தை சேர்ந்த நிசி கிளார்க், புதுமையான உணவு விநியோகத் தொழிலை தொடங்கி சாதித்துள்ளார். உடல் நலன் காக்கும் ஆரோக்கியமான சூப்பை தயாரித்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டிலில் வழங்கினார்.

அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அதையே தனது தொழிலாக மாற்றிவிட்டார். "நர்சிங் என்பது மிக முக்கியமான பணி. அவசரக் காலத்திலும் அமைதியைக் கற்றுத்தரும் பணி" என்று தனது நர்சிங் பணி மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறார் நிசி கிளார்க்.

நர்சிங் படிப்பை முடித்ததும் லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் வேலையில் சேர்ந்தார். இங்கு கிடைத்த சம்பளத்தில் மிச்சம் பிடித்துச் சேமித்து வந்தார். கூடுதல் நேரம் உழைப்பதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் சேமிப்பாக மாற்றினார்.

"என் தந்தை வழக்கறிஞர். அவர்தான் சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். அதனால் என்னிடம் இயல்பாகவே சேமிப்பு பழக்கம் குடி கொண்டது. அதிக தொகையை சேமிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டேன். 20 வயதிலேயே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தேன். நான் சூப் தயாரிப்பு தொழிலில் ஈடுபட நினைத்தபோது, அந்த பணம் எனக்கு உதவியாக இருந்தது" என்று நினைவு கூர்கிறார், நிசி.

மருத்துவத்துறை சார்ந்த அனுபவமும், தொழில் பின்னணியும் இருப்பதால், உடலுக்கு நலம் தரும் சூப் தயாரிப்பில் ஈடுபட ஆர்வம் காட்டினார். ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து உணவு விநியோகத் தொழிலை தொடங்கினார். அப்போது தரமான, சுவையான சூப்பை விரும்பும் வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்துகொண்டார்.

பின்னர் 2019-ம் ஆண்டில், ரீ நரிஷ் என்ற அவரது சூப் பிராண்ட் பிறந்தது. அதுதான் மைக்ரோ ஓவனில் செய்யக்கூடிய மறுசுழற்சி பாட்டிலில் அடைக்கப்பட்ட உலகின் முதல் சூப் பிராண்ட் என்ற பெருமையை பெற்றது. சூப் பிராண்டு உருவாக்கத்தின்போது அவர் பல சவால்களை கடக்கவேண்டியிருந்தது.

மறுசுழற்சி பாட்டில் பற்றிய யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் உற்பத்தியாளரைக் கண்டுபிடிப்பதே அவருக்கு முக்கிய சவாலாக இருந்தது.

"என் சேமிப்புகள் அனைத்தும் தற்போது சூப் தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒரு முழுமையான வெற்றியை உறுதிசெய்ய நான் மகிழ்ச்சியுடன் வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறேன். என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை. இது மிகவும் ஆபத்தான உத்திதான். ஆனாலும், நான் என்னையும் என் கருத்தையும் நம்பினேன்.

எங்கள் பிராண்ட் அமீரகத்தில் இருக்கும் மற்றொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. எங்களுக்காக அவர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளனர். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதே உயர்தர தயாரிப்புகளைச் சிறந்த விலையில் தரமாக வழங்கமுடியும் என்பதை குறிக்கிறது" என்று விவரிக்கிறார் நிசி கிளார்க். இவரது குழந்தைகள் இங்கிலாந்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். 13, 14 வயதுடைய அவர்கள் தன் தியாகத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

"வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறது. என்னிடம் குறைந்த அளவு பொருள்கள் உள்ளன. ஆனால், நான் எப்போதும் இல்லாததை விட வாழ்க்கையில் பணக்காரனாக உணர்கிறேன். ஏனெனில் எனக்கு நம்பமுடியாத வேலை உள்ளது. இந்த உலகிற்குக் கற்பிப்பதற்கும், நன்றாகச் சாப்பிடுவதற்கும், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் எனக்கு அது உதவியாக இருக்கிறது" என்று புரிதலுடன் பகிர்ந்துள்ளார் நிசி கிளார்க்.


Next Story