ராணுவத்தில் அக்னிவீரர்கள் : சேருவது எப்படி அக்னிபத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன? முழு விவரம்


ராணுவத்தில் அக்னிவீரர்கள் : சேருவது எப்படி அக்னிபத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன? முழு விவரம்
x
தினத்தந்தி 16 Jun 2022 6:38 AM GMT (Updated: 17 Jun 2022 4:32 AM GMT)

ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.

புதுடெல்லி

உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் ராணுவத்துக்கான நிதியைப் அதிகரித்து கொண்டேவருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உலக நாடுகள் தங்களின் ராணுவத்துக்கு 2.1 டிரில்லியன் டாலரைச் செலவு செய்திருக்கிறது.

உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 801 பில்லியன் டாலரை செலவு செய்தது. அந்த வகையில் சீனா, 293 பில்லியன் டாலர் செலவிட்டு 2-ம் இடத்தில் உள்ளது.

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் ராணுவத்துக்காக 76.6 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தியா தனது ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராணுவத்தில் தேவையில்லா செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் நடத்தி வந்தது.அதன்படி, அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அக்னிபத் என்றால் என்ன...?

ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு

அறிவிக்கவுள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள்.

இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்றழைக்கப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளாது.

அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஆனால் மீண்டும் பணி என்பதை இதுவரை இன்னும் உறுதிபடுத்தவில்லை. இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

வேலையில் சேர கல்வி தகுதி

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அக்னிவீரரின்ன் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. இப்படிப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறும் அக்னிவீரர், 12வது தேர்ச்சி பெற்றவராக கருதப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறுவார்.

* பணிக்கான வயது வரம்பு: 17 ½ – 21 வயது வரை (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

* பணிக்காலம்: 4 ஆண்டுகள்

* காலிப் பணியிடங்கள்: 45,000 முதல் 50,000 (ஆண்டுதோறும்)

* பயிற்சி காலம்: 6 மாதங்கள் * சம்பளம்: ரூ. 30,000-ரூ. 40,000

அக்னிவீரர்களுக்கான கல்வித் தகுதி, பல்வேறு பிரிவுகளில் சேர்வதற்கான தகுதி நடைமுறையில் உள்ளது. ஜெனரல் டூட்டி (ஜிடி) சிப்பாய்க்குள் நுழைவதற்கு, கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும்.'


பிரிவுகள்

கல்வி தொகுதி

வயது

சிப்பாய் ஜெனரல் டியூட்டி

45% மதிப்பெண்களுடன் எஸ்எஸ்எல்சி/மெட்ரிக் அதிக தகுதி இருந்தால் சதவீதம் தேவையில்லை.

17.5 - 21 வயது (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

சிப்பாய் டெக்னிக்கல்

இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்துடன் அறிவியலில் 10+2/இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி.

17.5 - 21 வயது (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

சிப்பாய் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்

10+2/இடைநிலைத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் (கலை, வணிகம், அறிவியல்) மொத்தம் 50% மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

17.5 - 21 வயது (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

சிப்பாய் நர்சிங் உதவியாளர்

10+2/இடைநிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

17.5 - 21 வயது (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

சிப்பாய் டிரேட்ஸ்மேன்

17.5 - 21 வயது(நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

(i)பொது கடமைகள்

மெட்ரிக் அல்லாதது

17.5 - 21 வயது (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

(ii)குறிப்பிட்ட கடமைகள்

மெட்ரிக் அல்லாதது

17.5 - 21 வயது (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)

விண்ணப்பிப்பது எப்படி...?

ஆயுதப்படைகள் உள்பட பல்வேறு வளாகங்களில் ஆள்சேர்ப்பு பேரணிகள் மற்றும் சிறப்பு முகாம்களை நடத்தும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும். தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பு போன்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு முமாக்ம்கள் மற்றும் வளாக நேர்காணல்கள் நடத்தப்படும்.இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் மூலம் முறையில் நடக்கவுள்ளது.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய காலியிடங்கள் மற்றும் சேரும் செயல்முறை அந்தந்த ஆயுதப்படை இணையதளங்களில் கிடைக்கும்.

அந்த இணையதளங்கள்:

joinindianarmy.nic.in

joinindiannavy.gov.in

careerindianairforce.cdac.in

திட்டம் எப்போது தொடங்கும்?

இத்திட்டம் ஜூன் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது, இதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை 90 நாட்களுக்குள் தொடங்கும்.

அக்னிவீரர்கள் விருப்பம்போல் தற்காலிகமாக ராணுவத்தில் சேவை செய்துவிட்டு இயல்புக்கு திரும்பலாம். டூர் ஆப் டூட்டி திட்டத்தை ராணுவத்தில் உள்ள வீரர்கள் பற்றாக்குறையை சரி செய்ய கொண்டுவந்துள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. மேலும் இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு ஆயுள் காப்பீடு கிடைக்கும்? அக்னிவீரர்கள் ஆண்டுகளுக்கு ரூ.48 லட்சம் ஆயுள் காப்பீடு பெறுவர்.

ஓய்வு பெறும் போது கிடைக்கும் நன்மைகள் என்ன?

பணி ஓய்வு பலன்: ரூ. 10-12 லட்சம் (வரிச்சலுகையுடன்) டூர் ஆப் டூட்டி திட்டம் மூலம் நியமிக்கப்படும் பணியாளருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும். இதில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

அரசாங்கமும் அதற்கு சமமான தொகையை செலுத்தி அதை சேவா நிதி திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான தொகை 4 ஆண்டுகள் பணி முடியும் போது வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் அனுபவத்தை பெற விரும்பும் இந்திய இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றலாம். இதுதவிர அக்னிவீர் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.18 லட்சம் வரை கடனும் பெறலாம். எனினும், அதன் விதிமுறைகள் இன்னும் கூறப்படவில்லை.

அக்னிவீரர்களுக்கு ஆயுதப்படையில் நிரந்தர வேலை கிடைக்குமா? இல்லை, 25% அக்னிவீரர் வீரர்களுக்கு மட்டுமே ராணுவத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அது அவர்களின் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

வருடங்கள் தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்பு (மாதாந்திரம்) கையில் வருவது(70%) அக்னிவீர் கார்பஸ் நிதிக்கான பங்களிப்பு (30%) மூலம் கார்பஸ் நிதிக்கு பங்களிப்பு
முதல் வருடம் 30000 21000 9000 9000
2-வது வருடம் 33000 23100 9900 9900
3-வது வருடம் 36500 25580 10950 10950
4-வது வருடம் 40000 28000 12000 12000
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னிவீர் கார்பஸ் நிதியில் மொத்த பங்களிப்பு ரூ.5.02 லட்சம் ரூ.5.02 லட்சம்
4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் போது சேவா நிதி தொகுப்பாக வட்டியுடன் மொத்த தொகை ரூ.11.71 லட்சம்

4 ஆண்டுகள் சேவைக்கு பின்னர்...?

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பணி புரியும் வீரர்களுக்கு நான்காண்டு பணி நிறைவுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொலை தகவல் தொடர்பு சேவை வழங்கும் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன்- ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற உள்ள வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, தொழில்திறன்கள் ஆகியவற்றை தகவல் தொடர்புத்துறையில் குறிப்பாக தொலை தகவல் தொடர்பு சேவைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கண்ணாடி இழை பராமரிப்பு, குளிர்சாதனங்கள் பராமரிப்பு, கடைக்கோடிக்கு தொடர்பளிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வழங்குதல், வீடுகளுக்கு கண்ணாடி இழை அமைத்தல் போன்ற வேலைவாய்ப்புக்குரிய பகுதிகள் இந்த விவாதத்தின் போது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

தியாகி என்றால் என்ன நடக்கும்?

ஒரு அக்னிவீரர் வீரமரணம் அடைந்தால், அவருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும். இதனுடன், அவரது மீதமுள்ள சேவைக்கான சம்பளமும் கிடைக்கும்.

ராணுவத்திற்கு என்ன பயன்...?

2022-23 பாதுகாப்பு பட்ஜெட் 5.25 லட்சம் கோடியாக இருந்தது. இதில், 1.19 லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதியத்திற்காகவும், அதே அளவு சம்பளத்திற்காகவும் செலவிடப்படும். ராணுவத்தின் எஞ்சிய தேவைகள் சுமார் மூன்றரை லட்சம் கோடியில் பூர்த்தி செய்யப்படும். அக்னிவீரர் திட்டம் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்திற்கான செலவில் பெரும் பகுதியை மிச்சப்படுத்தும், இராணுவத்திற்கு நல்ல ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இதனை செலவிட முடியும்.


Next Story