டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள்


டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள்
x

தமிழகத்தின் தலைமைச்செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இலவச ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியத் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்துகிறது. இந்த பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. தமிழகத்தின் தலைமைச்செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் காணொலிப்பாதை (YouTube channel) ஒன்றைத் துவக்கி அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வினை நடத்தியது. கிராமப்புறங்களில் வசிப்போரும், தமிழ்வழிக் கல்வியில் பயின்றோரும் இப்போட்டித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெறும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 102 மணி நேர பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து பதிவேற்றம் செய்தது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 25-2-2023 அன்று நடத்தவுள்ள குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான போட்டித் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்துள்ளது. போட்டித் தேர்வுகளில் நிறைந்த அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள் பாடங்களை நடத்தியுள்ளார்கள்.

தமிழ்வழிக் கல்வி பயின்றோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாடங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து போதிக்கப்படுகின்றன. 60 நாட்களில் பயிற்சியை முடிக்க முடிவுசெய்துள்ளதாலும், கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளும் இந்தப் பயிற்சியை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த முயற்சிக்கு 'நோக்கம் 60 - சேர இயலாதவர்களைச் சென்றடைதல்' (MISSION 60 - Reaching the Unreached) என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல் காணொலி AIM TN யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காணொலிகளின் ஊடாக 18 தொடர் தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு விருப்பப்படும் மாணவர்களுக்கு அனுப்பப்படும். மாணவர்கள் எழுதி அனுப்பும் விடைத்தாள்களும் வல்லுநர்களால் திருத்தப்பட்டு மாணவர்கள் தங்கள் விடைகளைச் சுய மதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் திருப்பி அனுப்பப்படும் என்று அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிவித்துள்ளது.


Next Story