எளிமையின் இலக்கணம் கக்கன்


எளிமையின் இலக்கணம் கக்கன்
x

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் நேர்மைக்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.

சுதந்திர போராட்ட தியாகி, நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், இந்திய அரசியல் அமைப்பியல் உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர்.

அரசியல்வாதி என்றாலே பணமும், சொத்தும் குவிக்க நினைக்கும் இந்த காலத்தில் தன் வாழ்நாள் முழுவதும் அரசியலை புனிதமாக கருதி, தூய்மையான வாழ்வு நடத்தி எளிமையாகவே வாழ்ந்து மறைந்தவர்.

கக்கன் 18-6-1908-ல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி கிராமத்தில் பிறந்தார். தந்தை பூசாரி கக்கன். தாயார் குப்பு. மனைவி சொர்ணம் பார்வதி.

தொடக்க கல்வியை மேலூரில் பயின்ற கக்கன், திருமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். வறுமை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது.

மாணவ பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்கு உதவியாக இருந்தார். தமிழகத்தின் பல இடங்களுக்கும் அவருடன் சென்றார்.

'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கக்கன் பங்கேற்று கைதாகி அலிப்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

1952 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் காமராஜர் ஆட்சியிலும், பக்தவசலம் ஆட்சியிலும் கக்கன் பொதுப்பணித்துறை ஆதிதிராவிடர் நல்வாழ்வு, விவசாயத்துறை, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார்.

கக்கனின் நேர்மைக்கு சான்றாக சில நிகழ்வுகளை குறிப்பிடலாம்.

கக்கன் போலீஸ் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரது தம்பி விஸ்வநாதன் காவல்துறை பணியில் சேர விண்ணப்பித்து இருந்தார். அதற்கான பரீட்சையில் தேறி, சப்-இன்ஸ்பெக்டராக தேர்வானார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அண்ணனிடம் தெரிவித்து ஆசி பெற சென்றார். செய்தி அறிந்த கக்கன் தம்பியைப் பாராட்டவில்லை. மாறாக ஐ.ஜி.யாக இருந்த அருளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எந்த அடிப்படையில் விஸ்வநாதனை போலீஸ் துறைக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டார்.

'அவர் விளையாட்டில் சிறந்தவர்' என்ற அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஐ.ஜி. அருள் தெரிவித்தார்.

உடனே கக்கன் தகுதி தெரியாமல் நியமனம் செய்திருப்பது முறையாகாது. விஸ்வநாதனின் இடதுகை விரல்கள் சரியாக செயல்படாது. சுண்டுவிரலும், அதற்கு அடுத்த மோதிர விரலும் சற்று வளைந்து இருப்பதால் அவனால் துப்பாக்கி சுட முடியாது என்று கூறி விஸ்வநாதனின் பணி ஆணையை ரத்து செய்தார்.

ஒருமுறை மலேசிய மந்திரி கக்கனை சந்தித்து ஒரு தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். அதை வாங்க மறுத்தார் கக்கன். எனினும் விடாப்பிடியாக அவர் வலியுறுத்தவே வேறு வழியில்லாமல் அதை பெற்றுக்கொண்ட கக்கன் ஊழியரை அழைத்து அதனை அலுவலக பதிவேட்டில் பதிவு செய்யும்படி கூறினார்.

இது அரசுக்கு அல்ல. உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்குத்தான் தந்தேன் என்று மலேசிய மந்திரி கூறியும் கக்கன் கேட்கவில்லை.

நான் அமைச்சராக இல்லையென்றால் இந்த பேனாவை தந்து இருப்பீர்களா?

மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள் பரிசு பொருட்களை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறி தங்கப்பேனாவை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டார்.

ஆட்சி மாறி அமைச்சர் பதவி போய்விட்ட நேரத்தில் சென்னையில் வாடகை வீடு தேடித் தெருத்தெருவாக அலைந்தார். நகர பஸ்களில் பயணிகளுடன் பயணம் செய்தார். தன் வாழ்க்கையின் இறுதி காலத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கக்கன், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களோடு சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது உடல்நல குறைவால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரை பார்க்க முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு போனார்.

கக்கனும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரை பார்க்கச் சென்றார்.

ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் ஏழ்மைக் கோலத்தில் ஒரு கட்டிலில் படுத்துக்கிடந்த கக்கனை பார்த்து அதிர்ந்து போனார். பேசமுடியாமல் கண்கலங்கினார்.

கக்கனின் இரு கைகளையும் பரிவுடன் பிடித்துக்கொண்டு நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன். வேறு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். அதற்கு கக்கன் ஒன்றும் வேண்டாம் நீங்கள் பார்க்க வந்ததே போதும் என்று கூறி இயல்பாக மறுத்தார்.

உடனே ஆஸ்பத்திரி டீனை அழைத்த எம்.ஜி.ஆர். 'இவர் யார் தெரியுமா? இந்திய அரசியல் சாசன அவையில் இடம்பெற்று இருந்தவர். இவரது உழைப்பால் கிடைத்த சுதந்திரக்காற்றை நாம் அனுபவித்து வருகிறோம். இவரை மரியாதையாக நடத்த தெரியவில்லையே!' என்று கூறி கண்டித்தார். உடனடியாக அவரை 'ஏ' வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

ஒரு முறை கக்கனின் மனைவி அரசு ஊழியர் ஒருவரிடம் மண்எண்ணெய் வாங்கி வரும்படி கூறினார். இதைக்கவனித்து விட்ட கக்கன் மனைவியிடம் இவர் அரசாங்கத்துக்கு ஊழியம் செய்பவர். உன் வீட்டுக்கு வேலை செய்ய வரவில்லை என்று அந்த ஊழியர் முன்பாகவே மனைவியைக் கண்டித்தார். கக்கன் மனைவி கண்ணீர் மல்க நின்றார். பின்னர் மனைவியிடம் ரோட்டில் இருக்கும் மண்எண்ணெய் கேனை நீயே வீட்டுக்குள் எடுத்துப்போ என்று கூறினார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், கக்கனின் எளிமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வினைப் பதிவு செய்து இருக்கிறார்.

அவர் கூறுகிறார்-

நானும், அவரும் (அமைச்சர் கக்கன்) ஒருமுறை ரெயிலில் பயணம் செய்து விட்டு இருவரும் மதுரை விருந்தினர் மாளிகையில் ஒன்றாக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நான் ஆடம்பர வாழ்வில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவன். முகச்சவரம் கூட ஆடம்பரமாகத்தான் செய்வேன். எலக்ட்ரிக் ஷேவரால்தான் சவரம் செய்வேன். சவரம் செய்துவிட்டு 'ஓடிகோலன்' கலந்த ஸ்நோ பவுடர், இவையெல்லாம் தடபுடலாக செய்து கொண்டு இருந்தேன்

என்னை மிகவும் கவனமாக கவனித்து கொண்டு இருந்த அமைச்சர் கக்கன் என்னைப் பார்த்து சிரித்தார். என்னை அழைத்து என்னங்க இதுக்கு இவ்வளவு நேரம்? இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சவரம் செய்றீங்க என்னைப்பாருங்க என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார். அதைக்குறுக்கில் இரண்டாக உடைத்தார். ஒரு பாதி பிளேடால் மளமளவென்று முகச்சவரம் செய்து கொண்டார். கீறலோ, வெட்டோ, ரத்தக்கசிவோ எதுவுமில்லாமல் லாவகமாக செய்து கொண்டார். அவர் என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்.

இதெல்லாம ஜெயிலில் இருக்கும்போது கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடம். மந்திரியானபோதும் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று புன்னகைத்தவாறே கூறினார்.

ஒரு முறை கக்கன் பஸ்சில் பயணம் செய்தார். அவர் செல்ல வேண்டிய இடம் வரை டிக்கெட்டுக்கு போதிய காசு இல்லை. அவரை அறிந்த கண்டக்டர் ஐயா காசு வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் தன்னிடமிருந்த காசை கொடுத்துவிட்டு அதற்கான ஸ்டாப் வந்ததும் இறக்கி நடந்தே சென்றார்.

அந்த மனிதப் புனிதர் 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். பின்னர் பொது வாழ்வில் இருந்து விலகினார்.

1981-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி உடல்நல குறைவால் சென்னையில் காலமானார்.

கக்கன் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி இந்திய அரசு அவரது உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

தமிழக அரசு சார்பில் மதுரையில் முழு வெண்கல சிலையும், கக்கனின் சொந்த ஊரான தும்பைப் பட்டியில் மணிமண்டபமும் அமைத்து கவுரவப்படுத்தியது.


Next Story