கண் போய்டும்.. உயிர் போய்டும்..! கள்ளச்சாராயம் உடல் உறுப்புகளை அழிப்பது எப்படி..?


கண் போய்டும்.. உயிர் போய்டும்..! கள்ளச்சாராயம் உடல் உறுப்புகளை அழிப்பது எப்படி..?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 May 2023 4:51 AM GMT (Updated: 20 May 2023 6:25 AM GMT)

எதையாவது குடித்துவிட்டு மட்டையாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் உயிரையே காவு வாங்குகிறது கள்ளச்சாராயம்.

சென்னை,

கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் உடல் உறுப்புகளை அழிப்பது எப்படி...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு. மெத்தனால் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம். போதையை கொடுக்கும் மதுவின் நச்சு வடிவமும் கூட.

இதனை பயன்படுத்தி வில்லேஜ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததுதான் கள்ளச்சாராயம்... அரிசி, பழைய பழங்களை கொண்டு ஊறல்களை போட்டு சாராயம் காய்ச்சுவோர் ஒரு கிக்குக்காக அதில் மெத்தனாலை கலந்து விடுகிறார்கள்.

உடலில் அந்த ரசாயனத்தின் எதிர்வினை எப்படியெல்லாம் இருக்கும் என்பதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் கடலூரில் தொழிற்சாலையில் இருந்து எடுத்த மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

எது எப்படியோ உடலுக்கு தேவை போதை.. அதற்கு எதையாவது குடித்துவிட்டு மட்டையாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் உயிரையே காவு வாங்குகிறது கள்ளச்சாராயம்.

இப்படி மெத்தனால் கலந்த சாராயத்தை 10 மில்லி குடித்தால் கண்ணே போய் விடும்... 50 மில்லி குடித்தால் ஆளே காலியாகி விடுவார்கள் என்கிறார் மருத்துவர் ரவி. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், கள்ளச்சாராயம் குடிக்காமல் இருப்பதே சிறந்தது எனக் கூறும் மருத்துவர் ரவி, அப்படியே மருத்துவ சிகிச்சையில் உயிர்பிழைத்தாலும் கண் தெரிய வாய்ப்பே இல்லை என்கிறார்..

உடலையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் கருகிப்போகச்செய்யும் கள்ளச்சாராயத்தை குடிப்பதை தவிர்க்கவேண்டும் எனவும், அதனை ஒழிக்க நடவடிக்கையை தொடரவேண்டும் என்பதே அனைவரது வலியுறுத்தலாக இருக்கிறது.


Next Story