தந்தையிடம் பயிற்சி பெற்று பரிசு வென்றவர்


தந்தையிடம் பயிற்சி பெற்று பரிசு வென்றவர்
x

தந்தையிடம் 3 மாதங்கள் பயிற்சி பெற்று, தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி முகமது ரயான் பெய்க்.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற அகில இந்திய ஜிவி மவலாங்கர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். ஆடவருக்கான தனி விளையாட்டில் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 600 புள்ளிகளுக்கு 581 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார். தந்தையிடம் பயிற்சி பெற்று மூன்றே மாதங்களில், தேசிய அளவில் பங்கேற்ற போட்டியில் பட்டம் வென்று பெய்க் அசத்தி இருக்கிறார்.

இது குறித்து பெய்க், "8 ஆண்டுகளாகவே என் தந்தை துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்து வருகிறார். போட்டிகளில் கலந்து கொண்டு 5 முறை வெற்றியும் பெற்றுள்ளார். அவர் துப்பாக்கி சுடுவதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. படிப்பை முடிக்கும் வரை காத்திருந்தேன். என்ஜினீயரிங் முடித்ததும் கர்நாடக மாநில துப்பாக்கிச் சுடும் சங்கத்தில் இணைந்தேன். வீட்டிலும் தனியாக பயிற்சி மேற்கொண்டேன்.

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றே ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். இயற்கையாகவே துப்பாக்கி சுடுதலில் எனக்கு திறமை இருந்தது. என் தந்தை பயிற்சி அளித்த பின்னர் எனது திறமை ெமருகேறியது.

விளையாட்டில் அர்ப்பணிப்பும் கவனமும் தேவை. நல்ல பயிற்சி செய்து நுணுக்கங்களை கற்றறிந்தால் நிச்சயம் ஒலிம்பிக் வரை செல்ல முடியும். இனி நடைபெறும் துப்பாக்கிச்சுடும் போட்டிதான் என் இலக்கு. அதுவும் பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டிகளைதான் எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

இயற்கையாகவே துப்பாக்கி சுடுதலில் எனக்கு திறமை இருந்தது. என் தந்தை பயிற்சி அளித்த பின்னர் எனது திறமை ெமருகேறியது.


Next Story