வாளி தண்ணீரில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி


வாளி தண்ணீரில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி
x

ஊட்டியில் வாளி தண்ணீரில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சலீம் (வயது 32). அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரிஜோத் பானு (28). இவர்களுக்கு 1½ வயதில் ரோஜா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குழந்தை ரோஜா வீட்டு வராண்டாவில் விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதனால் யாரேனும் திருடி சென்று விட்டார்களோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதற்கிடையில் வீட்டின் குளியல் அறை கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது குழந்தை ரோஜா வாளி தண்ணீரில் தலைகீழாக கிடப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து தூக்கினர். அப்போது தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story