அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து; 10 பேர் உடல் கருகி பலி


அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து; 10 பேர் உடல் கருகி பலி
x

அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு ஆலை

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை ராஜேந்திரனின் மருமகன் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.

இதில் சிவகாசி மற்றும் விருதுநகரில் இருந்து 10 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பேன்சி பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று காலை ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பு பணியில் 2 பெண்கள் உள்பட சுமார் 35 பேர் ஈடுபட்டு இருந்தனர். இதில் பலர் காலை 8.30 மணி அளவில் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டனர்.

வெடித்து சிதறிய பட்டாசுகள்

மீதம் இருந்தவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து பயங்கரமாக வெடிவெடிக்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஆலையில் தயாரித்து வைத்திருந்த வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. விபத்தை உணர்ந்த தொழிலாளர்கள் ஆலையை நோக்கி ஓடி வந்து பார்த்தபோது, ஆலை கட்டிடம் இடிந்து தரைமட்டமாது, வெடிகள் வெடித்துக்கொண்டு இருந்தன. தொடர்ந்து அதன் அருகே இருந்த 5 கட்டிடங்களில் வைக்கப்பட்டு இருந்த வெடி பொருட்களும் தீப்பிடித்து வெடித்து சிதற ஆரம்பித்தன.

10 பேர் உடல் சிதறி பலி

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர், பெரம்பலூர், வேப்பூர், செந்துறை, திருவையாறு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆலை வளாகத்துக்குள் சென்று பார்த்தபோது 2 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகி கிடந்தனர்.

9 பேர் அடையாளம் தெரிந்தது

இந்த விபத்தில் இறந்த அரியலூர் மாவட்டம் விரகாலூர் அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த ரவி (45), இவரது மனைவி சிவகாமி (42), சப்பாணி மனைவி வெண்ணிலா (43), கிருஷ்ணன் மனைவி ராசாத்தி (45), பிள்ளையார்பட்டியை சேர்ந்த சிவகுமார், கும்பகோணம் அருகே உள்ள மணப்படையூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (50), விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த சீனு, விருதுநகர் மாவட்டம் கோபாலபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூரை சேர்ந்த அறிவழகன் ஆகிய 9 பேர் அடையாளம் தெரிந்தது.

இதில் 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை, அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள்

இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகியோரை தேடி வருகிறார்கள். இந்த விபத்தில் ஆலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 இருசக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு வேன் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story