மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் சாவு
![மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் சாவு மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/19/1150166-d-4.webp)
ஏரியூர்:-
ஏரியூர் அருகே மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் செத்துள்ளன. இதற்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஆடுகள் சாவு
ஏரியூர் அருகே புதூர் சோழப்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் தன்னுடைய மனைவி, மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தான் அங்கம்மாளுடன் வசித்து வருகிறார். செல்வராஜ் ஊருக்கு ஒதுக்குப்புறமான தன்னுடைய விவசாய நிலத்தில் 20 ஆடுகள் வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
நேற்று அதிகாலை திடீரென இவரது ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மர்ம விலங்கு 16 ஆடுகளை கடித்து குதறியது. இதில் பத்து ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்துகிடந்தன.
கதறி அழுதார்
காலையில் வழக்கம் போல் எழுந்து ஆடுகளை பார்த்த செல்வராஜ், ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்த ஆடுகளை கண்டு கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
இதையடுத்து அந்த பகுதியில் திரண்ட பொதுமக்கள், அடிக்கடி மர்ம விலங்குகள் இதுபோன்று கால்நடைகளை கடித்து இறக்க செய்கின்றன. எனவே செல்வராஜூக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.