பெரம்பலூரில் செல்லாக்காசான 10 ரூபாய் நாணயங்கள்


பெரம்பலூரில் செல்லாக்காசான 10 ரூபாய் நாணயங்கள்
x

பெரம்பலூரில் செல்லாக்காசான 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விவரம் வருமாறு:-

பெரம்பலூர்

500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட 10 ரூபாய் நோட்டுகள் அதிகமாக மக்களின் கைகளை கடந்து செல்கிறது. இதனால் 10 ரூபாய் நோட்டுகள் கிழியும் நிலையில், அழுக்குகள் நிறைந்து காணப்படும். எனவே 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

செல்லாது என்று வதந்தி

இந்த நாணயங்கள் முதலில் மக்கள் கைகளுக்கு புழக்கத்துக்கு வந்தபோது வியப்புடன் பார்த்தனர். மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி பரிவர்த்தனை செய்தனர். தமிழகத்தில் பெரம்பலூர் உள்பட சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே காட்டுத்தீப்போல் பரவியது. பொதுவாக ஒரு வதந்தி என்பது சில நாட்கள் வரை இருக்கும். ஆனால் 10 ரூபாய் நாணய விவகாரம் பொறுத்தவரையில் மக்களிடையே நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள். 10 ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் பயணிகள் தகராறு

பெரம்பலூர் மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகளிடம் கொடுத்தால் அதனை அவர்கள் வாங்குவதில்லை. பஸ்களில் கூட இந்த நிலை தான் நீடிக்கிறது. சில்லறையாக கொடுங்கள் என்று பஸ் கண்டக்டர்கள் கூறுவார்கள். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அதை வாங்குவதில்லை. ரூபாய் நோட்டாக வழங்குங்கள் என்கின்றனர்.

இதனால் வெளியூர் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. இதனால் 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதனை மாற்ற முடியாமல் தங்களது ஊர்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொதுமக்கள் வாங்கினால்...

பெரம்பலூர் ஜமாலியா நகரை சேர்ந்த காய்கறி கடை உரிமையாளர் ரவி:- கடைக்கு வரும் மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அவர்கள் வாங்க தொடங்கினால் நாங்களும் வாங்கி விடுவோம். ஆனால் பொதுமக்கள் தரப்பில் வியாபாரிகள் வாங்கவில்லை. அவர்கள் வாங்கினால் நாங்களும் வாங்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வாக மாவட்ட நிர்வாகம் தான் களமிறங்கி அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கோவில் உண்டியல்

பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த கோமதி:- 10 ரூபாய் நாணயங்களை வணிக நிறுவனங்களில் வாங்க மறுக்கிறார்கள். எனவே நாங்கள் நாணயத்தை பெற மறுக்கிறோம். முதலில் வணிகர்கள் நாணயத்தை வாங்கட்டும். பின்னர் நாங்கள் வாங்குகிறோம். அவர்கள் வாங்காததால் எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை கோவில் உண்டியலில் சேர்க்கின்றனர். குறிப்பாக அரசு பஸ்களில் கூட கண்டக்டர்கள் இந்த நாணயங்களை வாங்குவதில்லை. அவர்களுக்கும் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சில வங்கிகளில் கூட இந்த நாணயத்தை பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

தென் மாவட்டங்களில்...

வேப்பூரை சேர்ந்த செல்லமுத்து:- சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும், தென் மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை கடைக்காரர்கள், ஆட்டோக்காரர்கள் உள்பட அனைவரும் வாங்குகிறார்கள். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவியதால் டீக்கடைகள், மளிகைக்கடைகள், ஆட்டோக்கள், பஸ்களில் இந்த நாணயங்களை வாங்க மறுத்து விட்டனர். அதேபோன்று பொதுமக்களிடம் யாராவது இதனை கொடுத்தாலும் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இதனை தவிர்க்க அரசு, தனியார் வங்கிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ரூ.3 லட்சத்துக்கு தேக்கம்:

பொதுமக்கள் வாங்கினால் தான் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும்-வங்கி அதிகாரி தகவல்

பெரம்பலூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஆனந்தகுமார் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை. எங்கள் வங்கியில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுகிறது. ஆனால் எங்கள் வங்கியில் இருந்து கொடுக்கப்படும் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் மாவட்டத்தில் யாரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மாட்டார்கள் என்கிறார்கள். சுமார் ரூ.3 லட்சம் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் உள்ளன. பொதுமக்கள் வாங்கினால் தான் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தற்போது 20 ரூபாய் நாணயம் வெளிவந்துள்ளது என்றார்.


Next Story