100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 May 2023 7:00 PM GMT (Updated: 24 May 2023 7:01 PM GMT)

பழனியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

பழனியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் விற்பதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெற்றிச்செல்வி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் நகர், அடிவார பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி பிளாஸ்டிக் டீ கப்புகள், பாலித்தீன் பைகள் என மொத்தம் 100 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 65 கடைக்கார்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. வரும் நாட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அந்த கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story