திருட்டுப்போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


திருட்டுப்போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

நெல்லையில் திருட்டுப்போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் தொலைந்து போன, திருட்டு போன செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளில் சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பயனாக, தொலைந்து போன 100 செல்போன் மீட்கப்பட்டன.

அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதிகளில் நில மோசடி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.8 கோடியே 91 லட்சம் மதிப்பிலான சொத்துக்களின் போலி ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும் டிரேடிங் ஆப் மூலமும் கே.ஒய்.சி. அப்டேட் பரிசு கூப்பன் உள்ளிட்டவைகள் மூலமும் மோசடி செய்யப்பட்டு வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்த 40 பேரின் ரூ.49 லட்சம் மீட்கப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக பண மோசடி புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 15 பேர்களிடமிருந்து மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கில் ரூ.32 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story