10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...!


10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...!
x

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டது.

இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை என தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆகஸ்ட் 2022-ல் நடைபெற்ற, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

10-ம் வகுப்பு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:-

1. தனித்தேர்வர்கள் வருகிற 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன், "NOTIFICATION < SSLC SUPPLEMENTARY EXAM, AUG 2022< PROVISIONAL MARK SHEET DOWNLOAD" எனத் தோன்றும் வாசகத்தினை "Click" செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

மறுகூட்டனுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 25.08.2022 (வியாழக்கிழமை) மற்றும் 26.08.2022 ( வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

மறுகூட்டல் கட்டணம்:-

பாடம் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205 செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story