தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,166 வழக்குகள் ரூ.19 கோடிக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,166 வழக்குகள் ரூ.19 கோடிக்கு தீர்வு
x

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,166 வழக்குகள் ரூ.19 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

கரூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், குளித்தலை சார்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றது.கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1,166 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருமண வாழ்க்கை சம்பந்தமான வழக்குகள் தவிர காசோலை மோசடி வழக்குகள், வங்கிக்கடன், விபத்து வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. கரூர் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 128 வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,166 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.19 கோடியே 99 லட்சத்து 14 ஆயிரத்து 159 ஆகும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் செய்திருந்தார்.


Next Story