12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2023 4:06 AM GMT (Updated: 1 May 2023 5:43 AM GMT)

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற மே தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், " 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன்.

12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்த்தது. இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர்.

ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்" என்று அவர் கூறினார்.

முன்னதாக தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதல்-அமைச்சருடன், திமுகவின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.


Next Story