சின்னசேலத்திற்கு 1,296 மெட்ரிக் டன் உரம் வந்தது


சின்னசேலத்திற்கு 1,296 மெட்ரிக் டன் உரம் வந்தது
x

சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்திற்கு 1,296 மெட்ரிக் டன் உரம் வந்தது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நெல், பருத்தி, கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் பயிர்களுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் 665 மெட்ரிக் டன் யூரியா, 255 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 255 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 121 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் என மொத்தம் 1,296 மெட்ரிக் டன் உர மூட்டைகள் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து உர மூட்டைகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்கு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story