13 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது


13 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது
x

13 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெரியப்பா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஈஞ்சரமேடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தாள். கடந்த மாதம் 26-ந் தேதி பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து வந்துகொண்டு இருந்தாள்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (30) மற்றும் வாசுதேவன் (19) மற்றும் 15 வயது சிறுவன் என 3 பேர் அவளை வழிமறித்தனர். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக சிவக்குமாரின் வீட்டுக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

பெற்றோர் அதிர்ச்சி

பயந்தபடி வீட்டுக்கு சென்ற சிறுமியை மறுநாளும் மிரட்டி சிவக்குமாரின் வீட்டுக்கு வரவழைத்து 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் சிறுமி சோர்வடைந்த நிலையில் வீட்டுக்கு சென்றாள்.

சிறுமியின் பெற்றோர் மகள் சோர்வாக இருப்பதை கண்டு உடலில் ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டனர். அப்போது சிறுமி நடந்த சம்பவங்களை கண்ணீருடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளாள். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

பெரியப்பா கைது

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிவக்குமார் உள்பட 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, சிறுமியின் பெரியப்பா அதாவது தந்தையின் அண்ணனும் கடந்த 3 மாதங்களாக மகள் என்றும் பாராமல் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெரியப்பா மற்றும் வாசுதேவன் ஆகிய 2 பேரையும் போக்சோ வழக்கின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சிவக்குமார் மற்றும் 15 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story