144 தடை உத்தரவு பிறப்பிப்பு: 150 போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நேரடி நெல் விதைப்பு....!


தினத்தந்தி 30 Jun 2022 12:28 PM IST (Updated: 30 Jun 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே 150 போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27-ம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் பருத்திக்குடி கிராமத்தில் 3 விவசாயிகள் இன்று 18 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய முடிவு செய்தனர்.

போலீசார் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட 1 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் 3 துணை சூப்பிரண்டு, 8 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 150 போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தனையடுத்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 144 தடை உத்தரவால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

1 More update

Next Story