சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு


சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
x

சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர்

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- காரியாபட்டி பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன.

தோணுகால் ஊராட்சியில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகள் மூலம் இதுவரை ரூ.3.92 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2023-24 நடப்பாண்டில் ரூ.2.80 கோடி மதிப்பில் 12 பணிகள் 723 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. இன்னும் பல பணிகள் நடைபெற உள்ளன.எனவே உங்களுடைய கருத்துகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கூறும் பட்சத்தில், வரக்கூடிய காலங்களில் அவற்றை ஆலோசித்து அதற்கான திட்ட பணிகளை நமது கிராமத்தில் உருவாக்குவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story