அணை, கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள்; ஆய்வு கூட்டத்தில் தகவல்


அணை, கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள்; ஆய்வு கூட்டத்தில் தகவல்
x

பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள் நடந்ததாக திண்டுக்கல்லில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள் நடந்ததாக திண்டுக்கல்லில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் செயல்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம், திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு கூடுதல் முதன்மை செயலாளரும், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் தலைவருமான தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதிஉதவியுடன் நீர்வள நிலவள திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. இதற்காக உலக வங்கியின் பங்களிப்பாக ரூ.2 ஆயிரத்து 962 கோடி மற்றும் மாநில நிதி பங்களிப்பாக ரூ.888 கோடி என மொத்தம் ரூ.3 கோடியே 850 கோடி ஒதுக்கப்பட்டது.

அதன்மூலம் மாநிலம் முழுவதும் 47 ஆற்று படுகைகளில் நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் 7 துறைகள், 3 பல்கலைக்கழகங்கள் மூலம் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்தில் உற்பத்தித்திறனை அதிகரித்தல், காலநிலையை தாங்கும் தன்மையை மேம்படுத்துதல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், விளை பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல் ஆகியவை குறிக்கோள் ஆகும்.

ரூ.15 கோடியில் பணிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாறு உப வடிநிலத்தில் 9 கண்மாய்கள் 2 அணைகள், கால்வாய்களில் ரூ.11 கோடியே 2 லட்சம் மதிப்பிலும், சிறுமலையாறு உப வடிநிலத்தில் 9 கண்மாய்கள், கால்வாய்களில் ரூ.4 கோடியே 28 லட்சம் மதிப்பிலும் பணிகள் நடந்துள்ளன. இதனால் மஞ்சளாறு உபவடி நிலத்தில் 1028.34 ஹெக்டேர் நிலங்களும், சிறுமலையாறு உபவடி நிலத்தில் 294.30 ஹெக்டேர் நிலங்களும் பாசனவசதி பெறும் வசதி கிடைத்துள்ளது.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியங்கா, வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர்கள் கோபி, சுகுமார், வேளாண்மை உதவி அலுவலர்கள். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story