வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 15 பேர் காயம்


வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 15 பேர் காயம்
x

குளித்தலை, லாலாபேட்டை பகுதிகளில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்

வெறிநாய் கடித்தது

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள திமாச்சிபுரம் மற்றும் கே.பேட்டை, லாலாபேட்டை பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அப்பகுதிகளில் நின்று கொண்டிருந்த ஆண், பெண், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை துரத்தி, துரத்தி கடித்துள்ளது.

நாய் கடித்ததில் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த மலைக்கொழுந்து (வயது 60), ராதிகா (38), புகழேந்தி (51), கார்த்திக் (31), நந்தன் கோட்டை பகுதியை சேர்ந்த கிஷோர் (8), திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்த கிரி (4), மல்லிகா (60), முத்துலட்சுமி (35), தனபாக்கியம் (62), பாலகுமார் (33), சவுந்தர்ராஜன் (31), பிரகதீஸ்வரர் (6), சாந்தி (43), பரிவாணன் (5), கே.பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரா (53) ஆகிய 15 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த அனைவரையும் அவர்களது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நாய் கடித்ததால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காயம் அடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களிடம் தெரிவித்தார். ஒரே நாளில் வெறிநாய் கடித்து 15 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story