புதுக்கோட்டை: தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...!


x

கறம்பக்குடியில் தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடிக்கு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை கொல்லைகாடு கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 45) என்பவர் ஒட்டி சென்றார்.

பஸ்சில் சுமார் 20 பயணிகள் மட்டுமே இருந்தனர். இந்த பஸ் கறம்பக்குடி பெரிய அக்னி ஆற்று பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியபோது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஒடி கறம்பக்குடி பெரியகுளத்தின் வரத்து வாரி பாலத்தை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் சிக்கிய பயணிகள் காப்பாற்ற கோரி சத்தம் போட்டனர். இதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடன் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், விபத்து குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story