கறம்பக்குடி, வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் 1,600 ஏக்கர் வாழை-நெற்பயிர்கள் சேதம்


சுழன்று அடித்த சூறைக்காற்றால் கறம்பக்குடி, வடகாடு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 1,600 ஏக்கர் வாழை மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை

வாழைகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் கறம்பக்குடி பகுதியில் அதிக மழை இல்லை. ஆனால் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணி வரை பகுதி வாரியாக விட்டு விட்டு சூறைக்காற்று வீசியது. சுற்றி சுழன்று அடித்த இந்த காற்றால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மற்றும் நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து உள்ளன.

குறிப்பாக கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு, வெட்டன் விடுதி, கருப்ப கோன் தெரு, திருமணஞ்சேரி, கோட்டைக்காடு, பட்டத்திக்காடு, கருக்காக்குறிச்சி, வாணக்கன்காடு, சவேரியார்பட்டினம், மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் தார் விட்டு அறுவடை தருவாயில் இருந்த சுமார் 500 ஏக்கர் வாழைகள் சாய்ந்து சேதமாகியது.

விவசாயிகள் கண்ணீர்

இதேபோல் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் இந்த பகுதி விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர். சுனாமி பேரழிவில் இருந்து மீண்டு, கொரோனா பேரிடரில் தாக்குப்பிடித்து தற்போது தான் இந்த பகுதிகளில் முழுமையாக விவசாயம் நடைபெற்றது.

வானம் பார்த்த பூமி என்பதால் ஆழ்குழாய் பாசனம் மூலம் இரவு பகலாக விழித்திருந்து தண்ணீர் பாய்ச்சி வளர்த்த வாழை மரங்கள் பலன் கிடைக்கும் வேளையில் முறிந்து சாய்ந்து கிடப்பதை பார்த்து சில விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், போதிய மழை இல்லாததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. ஆழ்குழாய் பாசனத்திற்கு காலை 6 மணி நேரமும், இரவு 6 மணி நேரமும் என 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த ஒரு ஆண்டாக கடும் கஷ்டங்களுக்கு இடையே வாழை பயிர்செய்து வளர்த்தோம்.

ஒரு வாழைக்கு ரூ.200 செலவு செய்து உள்ளோம். பலன் கிடைக்கும் வேளையில் இப்படி ஒரு துயரம் வரும் என எதிர்பார்க்கவில்லை. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே மீளமுடியும் என விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

வடகாடு

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த காற்று, மழையால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலமாக, 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த, நெல், வாழை, சோளம் மற்றும் பலா, வேம்பு மற்றும் தென்னை மரங்கள் வேரோடு ஆங்காங்கே சாய்ந்தது. மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குடி

ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான தெட்சிணாபுரம் மாங்கோட்டை வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கீழப்பட்டி, வாண்டான்விடுதி, பெரியவாடி, கருக்காக்குறிச்சி, நெடுவாசல் புள்ளான்விடுதி கடுக்காகாடு உள்ளிட்ட பகுதிகளில் வாழை, நெற்பயிர்கள் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் சூறைகாற்றுடன் பெய்த கனமழையால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.


Next Story