இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் சென்னை வந்தனா்


இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் சென்னை வந்தனா்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:37 AM GMT (Updated: 12 Oct 2023 8:36 AM GMT)

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை

ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களும், புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்களும் கடந்த மாதம் 13-ந்தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 17 மீனவர்களையும் கைது செய்தனா். அவர்களை, படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 17 தமிழக மீனவர்களையும் கடந்த மாதம் 27-ந்தேதி இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. 17 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த தமிழக மீனவர்கள் 17 பேரையும் பா.ஜ.க. சார்பில் மாநில செயலாளர் சதீஷ்குமார், மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து, உணவு கொடுத்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் 17 மீனவா்களையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.


Next Story