கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது


கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது
x

கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது வினியோக திட்டம், சிறப்பு பொது வினியோக திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பண்டங்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படுவோர் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன்படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இம்மாதம் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.27.22 லட்சம் மதிப்புள்ள 4,813 குவிண்டால் பொது வினியோகத்திட்ட அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story