கடன் தர மறுத்த பெயிண்டரை தாக்கிய 2 பேர் கைது

பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கிட்ட சூரம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). பெயிண்டர். இவரது நண்பர்கள் டி.கோட்டம்பட்டியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி லோகேஷ்(24), பிரதீப் (24). சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவரிடம், லோகேஷ், பிரதீப் ஆகியோர் பணம் கடனாக வழங்க வேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை. இருக்கும்போது தருகிறேன் என்றார். மீண்டும் 2 வாலிபர்கள் ரதாகிருஷ்ணனிடம் உடனே பணம் வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தையால் திட்டியதோடு, லோகேஷ், பிரதீப் இருவரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ், பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.