11½ பவுன் நகைகளுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது


11½ பவுன் நகைகளுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
x

11½ பவுன் நகைகளுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். விமான நிலைய நுழைவு வாயில் அருகில் ஒரு வாலிபரும், விமான நிலையத்துக்குள் உள்ள பொது கழிப்பிடம் அருகே மற்றொருவரும் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருந்தனர்.

உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 36), நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையை சேர்ந்த வெங்கடேசன் (49) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ராஜேந்திரன் வைத்திருந்த பையில் 48 கிராம் தங்க நகைகளும், வெங்கடேசன் வைத்திருந்த பையில் 45 கிராம் தங்க சங்கிலியும் இருந்தன. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 11½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர், உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்றுச்செல்லுமாறு கூறி, அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

1 More update

Next Story