திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்-மனைவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக 2 பேர் கைது


திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்-மனைவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக 2 பேர் கைது
x

சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அதிரடி திருப்பமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆபாச படங்களை வைத்து மிரட்டியதாக அவர்கள் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பிரபல விடுதியில் கடந்த 3-ந் தேதி அன்று இரவு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசென்ஜித் கோஷ் (வயது 23) என்ற வாலிபரும், அர்பிதா பால் (20) என்ற இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினார்கள். அவர்கள் கொடுத்த முகவரியில் தாங்கள் இருவரும், கணவன்-மனைவி என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அவர்கள் இருவரும் பூட்டிய அறைக்குள் பிணமாக கிடந்தனர். 7-ந்தேதி அன்று திருவல்லிக்கேணி போலீசார் அவர்களது உடலை மீட்டனர். அந்த இளம்பெண்ணை கொன்றுவிட்டு, வாலிபர் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் அவர்கள் இருவரும் போலீசாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. தாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு 3 பேர்தான் காரணம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா (32), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22) ஆகிய இருவரை திருவல்லிக்கேணி போலீசார் நேற்று கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தப்பி ஓடிவிட்டார். கைதான இருவரும் கொடுத்த வாக்குமூலத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.

தற்கொலை செய்து கொண்ட அர்பிதா பால், தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை பார்த்துள்ளார். அவருடன் மேற்படி கைது செய்யப்பட்டுள்ள ராஜா மற்றும் நிதிஷ்குமார், தப்பி ஓடிய தர்மேந்திரா ஆகியோர் வேலை பார்த்துள்ளனர். அவர்களுடன் அர்பிதாபால் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. அதை பயன்படுத்தி அபிர்தாபால் ஆபாசமாக இருப்பது போன்ற படங்களை செல்போனில் எடுத்துள்ளனர்.

அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அபிர்தாபாலை உல்லாசத்துக்கு அழைத்துள்ளனர். இதனால் அபிர்தாபால், தன்னுடன் விடுதியில் தங்கிய பிரசென்ஜித்கோஷை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த திருமணம் நடந்தால் தன்னை மிரட்டமாட்டார்கள் என்று அபிர்தாபால் நம்பி இருக்கிறார். ஆனால் அதற்கு பிறகும் தொடர்ந்து மிரட்டி உள்ளனர்.

இதனால் அபிர்தாபால், பிரசென்ஜித்கோசுடன் விடுதியில் அறை எடுத்து தங்கி தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உடல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள்.


Next Story