பார்சல் வேன் மோதியதில் 2 நண்பர்கள் பலி


பார்சல் வேன் மோதியதில் 2 நண்பர்கள் பலி
x
தினத்தந்தி 22 Jun 2023 8:18 PM GMT (Updated: 23 Jun 2023 8:35 AM GMT)

பார்சல் வேன் மோதியதில் 2 நண்பர்கள் பலியாகினர்

சேலம்

மேட்டூர்:-

மேட்டூருக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்து விட்டு திரும்பி சென்ற போது பார்சல் வேன் மோதி நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நண்பர்கள்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உக்கிலியம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி மஞ்சுநாதன் (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவருடைய நண்பர் டீக்கடை தொழிலாளி சத்தியசீலன் (28). இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மேட்டூர் பூங்காவுக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

அங்கு சுற்றி பார்த்து பொழுதை கழித்த அவர்கள், மாலையில் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சத்தியசீலன் ஓட்டிச்சென்றார்.

மேட்டூர் ராமன்நகர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக எதிரே வந்த பார்சல் வேன், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மஞ்சுநாதன், சத்தியசீலன் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சத்திய சீலனுக்கு மனைவியும், 2 மாத குழந்தையும் உள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய பார்சல் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story