2 அரசு பஸ்கள் ஜப்தி


2 அரசு பஸ்கள் ஜப்தி
x

அருப்புக்கோட்டையில் விபத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் விபத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

விபத்தில் சாவு

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி வடக்கு பிள்ளைமார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்திருளன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பந்தல்குடியில் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் இழப்பீடு கோரி அவரது வாரிசுதாரர்கள் அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை ரூ.34 லட்சத்து 74 ஆயிரத்து 834 இழப்பீடு வழங்க நீதிபதி உத்திரவிட்டார்.

அரசு பஸ்கள் ஜப்தி

அதேபோல் அதே பாளையம்பட்டி வடக்கு பிள்ளைமார் கோவில் தெருவை சேர்ந்த சந்திவீரன் (63). கடந்த 2015-ம் ஆண்டு பாளையம்பட்டியில் நடந்த விபத்தில் அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து வழக்கில் அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 458 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த 2 வழக்குகளிலும் அரசு போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீடு வழங்கவில்லை.

இதையடுத்து சார்பு நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் உத்தரவுபடி அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் 2 அரசு பஸ்களை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். மேற்படி விபத்து ஏற்படுத்திய 2 பஸ்களும் தற்போது பயன்பாட்டில் இல்லாததால் அந்த பஸ்களுக்கு பதிலாக வேறு 2 பஸ்களை பணியாளர்கள் ஜப்தி செய்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story