பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி


பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2023 8:30 PM GMT (Updated: 24 Oct 2023 8:31 PM GMT)

தடாகத்தில் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்
துடியலூர்


தடாகத்தில் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த விபத்து குறித்து போலீசில் கூறியதாவது:-


கோவில் திருவிழா


கோவை தடாகம் அருகே உள்ள நெம்பர் 24 வீரபாண்டி கிராமத்துக்கு உட்பட்ட மேல்பதி, கீழ்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் 5 பேர் வந்துள்ளனர். இவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.


2 பேர் பலி


இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அருகில் உள்ள கிராமத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரும், பொதுமக்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்து இருந்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது. அதற்குள் ஆட்டோவுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்த வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை (வயது 42), கேபிள் ஆபரேட்டர் கருப்புசாமி (40) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


3 பேர் படுகாயம்


மேலும் இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த சக்திவேல் (38), யுவராஜ் (34), தினேஷ் (34) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்த விபத்து குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story