மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு


மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு
x

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் பள்ளத்தில் சிக்கித்தவித்த 2 வடமாநில தொழிலாளர்களை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை

சென்னை எண்ணூர் தாழங்குப்பம், உலக நாதபுரம் 6-வது தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தரையில் இருந்து சுமார் 10 அடி வரை பள்ளம் தோண்டி, ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்கனவே பக்கவாட்டில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 10 அடி உயரம், 20 அடி அகலமுள்ள மழைநீர் கால்வாய் சுவர் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது. இதில் பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த பிரகாஷ் (வயது 26), அம்ரேஷ் (23) ஆகிய 2 தொழிலாளர்கள் பள்ளத்தில் சிக்கி கொண்டனர்.

அவர்கள் மீது சுவர் விழுந்து அமுக்கியது. இதில் அவர்களின் இடுப்பு பகுதிக்கு கீழ் பள்ளத்துக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். இதை கண்டு சக தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், எண்ணூர் போலீசார் மற்றும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பொது மக்களுடன் இணைந்து பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டி எடுத்தும், சரிந்து விழுந்த சுவரை உடைத்தும் சுமார் 2 மணி நேரம் போராடி பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story