மண் குவியல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து பலி


மண் குவியல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து பலி
x

ஊட்டியில் வீட்டு தடுப்புச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது மண் குவியல் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகினர்.

ஊட்டி,

சென்னையை சேர்ந்த குமரேசன்- பத்மினி தம்பதியினருக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் சொந்தமாக இடம் உள்ளது. இவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து வீடு கட்டும் பணியை அர்ஷத் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தனர்.

இதன்படி கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே 35 அடி நீளம் 15 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது.

மண் சரிந்து 2 தொழிலாளர்கள் புதைந்தனர்

இந்த வேலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மாரக்கவுண்டன்புதூரை சேர்ந்த சேட்டு (வயது 54), வேலு (28) உள்பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மதியம் சுமார் 12 மணி அளவில் பள்ளம் தோண்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தது. அப்போது, திடீரென்று அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து விழுந்தது. இதில் சேட்டு, வேலு ஆகிய 2 பேர் மீது மண் விழுந்து மூடியதால் நிலத்தில் உயிரோடு புதைந்தனர். மற்ற 2 பேர் தப்பித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்து பதறிப் போன தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியாததால் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பெயரில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணில் புதைந்த 2 பேரையும் மீட்டனர். இதில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story