வேளாண் கண்காட்சியை 2½ லட்சம் பேர் பார்வையிட்டனர்


வேளாண் கண்காட்சியை 2½ லட்சம் பேர் பார்வையிட்டனர்
x

வேளாண் கண்காட்சியை 2½ லட்சம் பேர் பார்வையிட்டனர்,

திருச்சி

284 அரங்குகள்

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம்- 2023 என்ற மாநில கண்காட்சி திருச்சி கேர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியை கடந்த 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் வேளாண் விளை பொருட்கள், நவீன வேளாண் கருவிகள், புதிய ரக விதைகள், மாடி தோட்டம் அமைத்தல் தொடர்பாக 284 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியை பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து கண்காட்சியை பார்வையிட்டனர். 3 நாட்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

கருத்தரங்கம்

மேலும் கண்காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் வேளாண் விளை பொருட்களுக்கான ஏற்றுமதி உத்திகள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் சிறுதானிய சாகுபடி, வேளாண்மையில் எந்திர மயமாக்கல் மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம், பன்முக உணவாக பயன்படும் முருங்கை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வேளாண் வல்லுனர்கள் பேசினர்.

கண்காட்சி அரங்கில் நவதானியங்கள் மூலமாக செய்யப்பட்ட கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் முழு உருவ கட்-அவுட் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த கட்-அவுட் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பாராட்டு சான்றிதழ்

வேளாண்மை கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், கூடுதல் வேளாண்மை இயக்குனர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் முன்னிலையில் வேளாண்மைத்துறை ஆணையர் டாக்டர் சுப்பிரமணியன் உழவன் செயலி பயன்பாட்டை விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். அதனை பதிவிறக்கம் செய்த பணிக்காக வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக அரங்கு அமைத்தவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், இணை இயக்குனர் (வேளாண்மை) முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கண்காட்சிக்கு வருகை தந்த விவசாயிகளுக்கு கலவை சாதம் வழங்கப்பட்டது. அந்த உணவை விவசாயிகளுடன் அமர்ந்து கலெக்டர் சாப்பிட்டார்.

1 More update

Next Story