திருமணமான 2 மாதத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்


திருமணமான 2 மாதத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்
x

திருமணமான 2 மாதத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்எதிரேயே இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சத்தியவாணி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி பரோலினா (வயது 30). இவர்களுக்கு 2 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஜெகநாதன், குரோம்பேட்டை பகுதியில் இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று ஜெகநாதன், தன்னுடைய மனைவி பரோலினை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு குரோம்பேட்டை பகுதியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

படப்பை பகுதியில் இவர்கள் சென்றபோது, பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

சாைலயில் விழுந்த பரோலினா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய பரோலினா, கணவர் கண்எதிரேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகநாதன் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், காயம் அடைந்த ஜெகநாதனை சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான பரோலினா உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story