வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் வேலூர் கோர்ட்டில் சரண்


வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

காட்பாடி செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 22). இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது உடலையும் புதைத்தனர். இதையடுத்து காட்பாடி போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளிகுப்பத்தை சேர்ந்த திவாகர் (வயது 21), சதீஷ் (20) ஆகிய இருவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். கரிகிரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் மாஜிஸ்திரேட் பத்மகுமாரி முன்னிலையில் பள்ளிக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் (25), கரிகிரியை சேர்ந்த சூர்யா (25) ஆகியோர் நேற்று சரணடைந்தனர்.

பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் சேவூரை சேர்ந்த அந்தோணி (24) என்ற வாலிபரை தனிப்படை போலீசார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Next Story