லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர், மார்ச்.15-
நாகூர்- தெத்தி சாலையில் நாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த தெத்தி சமரசம் நகரை சேர்ந்த முஜீபுர் ரகுமான் (வயது 52) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முஜீபுர் ரகுமானை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதேபோல் வேதாரண்யம் கோடியக்கரை சாலை அகத்தியர் கோவில் பகுதியில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அகத்தியர் கோவிலுக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த அகஸ்தியன்பள்ளி குட்டாச்சிகாடு பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.