மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மோட்டார் சைக்கிள் திருட்டு

வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), தச்சுதொழிலாளி. இவர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். சாரதி மாளிகை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மார்க்கெட்டுக்கு சென்றார். சிறிதுநேரத்துக்கு பின்னர் ரவி திரும்பி வந்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடிசெல்ல முயன்றனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். பின்னர் ரவி அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் மடக்கி பிடித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அதில், அவர்கள் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகே உள்ள பெரிய ஏரியூரை சேர்ந்த காந்தி (65), கந்தனேரியை சேர்ந்த குமார் (47) என்பதும், உறவினர்களான இருவரும் சேர்ந்து வேலூர் நேதாஜி மார்க்கெட், கோட்டை நுழைவுவாயில், லாங்குபஜார், சாரதிமாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடியதும், அவற்றை பெரிய ஏரியூரில் உள்ள காந்தியின் வீட்டின் அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து காந்தி வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?, இதே போன்று வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடி உள்ளார்களா என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story