வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பொருவாய் சாரணக்குடியை சேர்ந்தவர் சின்னையா மகன் ஸ்ரீதர்(வயது 21). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான நீலமேகம் மகன் நிவாஸ்(21) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை தனியார் கார் சர்வீஸ் செய்யும் இடத்தின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஸ்ரீதர் மற்றும் நிவாஸ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் படுகாயம் அடைந்த நிவாசை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதேபோல் திருமயம் அருகே உள்ள மெய்யப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 60). இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் திருமயம் கடைவீதிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திருமயம்-பொன்னமராவதி சாலை அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சத்தியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story