தனித்தனி விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பலி


தனித்தனி விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 6:46 PM GMT)

செஞ்சி அருகே தனித்தனி விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

விழுப்புரம்

செஞ்சி

படுகாயம்

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் ஊரை சேர்ந்தவர் பூபதி மகன் விஜய் என்ற அனாமிகா(வயது 22). திருநங்கையான இவர் நேற்று காலை பிடாகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அனாமிகா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி(23), காதர் மகன் ஷாநவாஸ்(23) ஆகியோர் படுகாயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி பலி

செஞ்சியை அடுத்த ஊரணித்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வெங்கடேசன்(32). விவசாய தொழிலாளியான இவர் நேற்று காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story