கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து; உடல் கருகிய 2 பேர் பலி


கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து; உடல் கருகிய 2 பேர் பலி
x

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உடல் கருகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம்

கியாஸ் குடோனில் 'தீ'

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியதில் ஊழியர்கள் தீக்காயங்களுடன் அலறியடுத்து வெளியே ஓடினர். குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியதால், தகவல் அறிந்து குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் குடோனில் இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32), நிவேதா (21), தமிழரசன் (18), ஜீவானந்தம், சண்முகபிரியன், ஆமோத்குமார் ஆகிய 12 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அமைச்சர்கள் ஆறுதல்

காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தீ விபத்தில் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, தீக்காயம் ஏற்பட்ட 7 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் தீக்காயம் அடைந்த ஆமோத்குமார் (25) என்ற பீகார் மாநில வாலிபர் மற்றும் 21 வயது இளம்பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீக்காயம் அடைந்த பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கியாஸ் சிலிண்டர் குடோன் வெடி விபத்து தொடர்பாக தேவரியம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் (54), சாந்தி (48), ஜீவானந்தம் (46), மோகன்ராஜ் (38) பொன்னிவளவன் (45), ஆகிய 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story