அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்டோ மொபைல் கம்பெனியில் 2 செமஸ்டர் தொழிற்பயிற்சி


அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்டோ மொபைல் கம்பெனியில் 2 செமஸ்டர் தொழிற்பயிற்சி
x

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தொழிற்பயிற்சி வழங்கும் விதத்தில் மேன்டோ ஆட்டோமொபைல் கம்பெனியுடன் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தமிழக உயர் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

சென்னை,

சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகிய 2 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் 'சான்ட்விச் கோர்ஸ்' மூன்றரை ஆண்டுகள் நடத்தப்படும். இதற்கு இந்த ஆண்டில் இருந்தே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். சான்ட்விட் கோர்ஸ் படிக்கும் மாணவர்கள், மொத்தமுள்ள 7 செமஸ்டரில் 2 செமஸ்டரை மேன்டோ கம்பெனியுடன் (காஞ்சீபுரம் மாவட்டம்) மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.

2 செமஸ்டர்கள்

சான்ட்விச் படிக்கும் மாணவர்கள் 7 செமஸ்டர்களில் 4 மற்றும் 7-வது செமஸ்டர்களுக்கு இந்த மேன்டோ கம்பெனிக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். நான் முதல்வன் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்கள் பயிற்சி காலங்களில் அந்த மாணவர்களுக்கான விடுதி செலவுகள், படிப்பு செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் மேன்டோ கம்பெனியே பார்த்துக் கொள்ளும்.

மேன்டோ கம்பெனியில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மேன்டோ கம்பெனியில் வேலை பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். மிகச்சிறந்த திட்டமாக கருதிதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று செய்துள்ளோம். இதன்மூலம் முதல்வரின் கனவு திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கும் இது நல்ல பலன் அளிக்கும்.

5 பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கிற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தொகையையும் கட்டுவதாகவும் மேன்டோ கம்பெனி அறிவித்து உள்ளனர். அதற்காகவும் மேன்டோ கம்பெனிக்கு நன்றி.

ஜப்பான் மொழி

ஜப்பான் பல்கலைக்கழகத்தோடு தமிழகத்தில் இருக்கிற பல்கலைக்கழகங்களுக்கு பொருளாதார ரீதியாக தொடர்பு இருந்தாலும், கலாசார அடிப்படையில் தொடர்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். நாங்களும் அதற்காக, அவர்கள் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம்.

அவர்கள் அதற்கான ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை நியமிக்க ஒத்துழைப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே, தமிழகத்தில் படிக்கிற மாணவர்கள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டுக்கு தொழில் செய்ய செல்கிறார்கள். இதுவரை பொறியாளர், அறிவியல் படித்த மாணவர்கள் ஜப்பான் வருகிறார்கள். கலைப் பிரிவை படிக்கும் மாணவர்களும் ஜப்பான் வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கும் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம்.

2 நாடுகளுக்கு இடையே கலாசார தொடர்பும், பொருளாதார தொடர்பும் ஏற்படுவதற்கான எல்லா வழிகளையும் செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களும் அதை வரவேற்றிருக்கிறார்கள். கல்வி உரிமைத் தொகைக்காக 1 லட்சம் மாணவிகளுக்கு மேல் விண்ணப்பித்து உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story