மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு


மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
x

சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

உதவி சிறை அலுவலர்

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் கடலூர் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் மத்திய சிறை அருகே உள்ள உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது சொந்த வேலை காரணமாக மணிகண்டன் மருத்துவ விடுப்பில் கும்பகோணம் சென்றிருந்தார். இதனால் வீட்டில் மணிகண்டனின் தாய் சாவித்ரி, தந்தை ராமலிங்கம், மனைவி பவ்யா மற்றும் 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மர்மநபர்கள், மணிகண்டன் வீட்டின் சமையல் அறை ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர். இதில் மணிகண்டன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

மேலும் சமீபத்தில் கடலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த கைதிகளை கண்காணித்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில், கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஒரு தனிப்படையும், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story