பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்


பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
x

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

திருச்சி

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர மக்கள் பாதுகாப்பாக பொங்கல் கொண்டாடும் வகையில் மாநகரம் முழுவதும் 1,500 பேரும், புறநகரில் 500 பேரும் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், திருச்சியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன்கருதி 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவில்மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா கலந்து கொண்டு, பொங்கல் வைத்து, போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீதேவி, அன்பு மற்றும் உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆயுதப்படையில் உள்ள போலீசாரின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கமிஷனர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "மாநகர காவல்துறையினர் பல்வேறு பணிச்சுமைகளிலும் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. போலீசாரின் குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை பார்க்கும்போது, அவர்களுக்கு பல திறமைகள் உள்ளது. பெற்றோர் அதை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

இதேபோல் திருச்சி ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் சில போலீசார் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர். இதில் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் இனாம்குளத்தூர் போலீஸ் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது,


Next Story