ஆனைமலை, நெகமத்தில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி- துணி காயப்போடும் போது நிகழ்ந்த பரிதாபம்


ஆனைமலை, நெகமத்தில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி-  துணி காயப்போடும் போது நிகழ்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 10 Oct 2022 6:45 PM GMT (Updated: 10 Oct 2022 6:46 PM GMT)

ஆனைமலை, நெகமத்தில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை, நெகமத்தில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

மின்சாரம் தாக்கியது

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நந்தகுமார் வேலைக்குச் சென்ற பின் கவிதா வீட்டில் துணி துவைத்து வெளியே துணியை உலர வைக்க சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு துணி காயப்போடும் கொடியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் கவிதாவை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனை கவனித்த அவரின் மகன் தாயை காப்பாற்ற முயன்று உள்ளார்.

மகனுக்கு சிகிச்சை

இதனால் அவர்கள் 2 பேரையும் மின்சாரம் தாக்கியதால் தாயும்-மகனும் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் கொண்டு செல்லும் வழியிலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.

அவரின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெகமம்

இதேபோல் நெகமம் அடுத்த மூட்டாம்பாளையம் கண்டி காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சுபநந்தன் விவசாயி. இவரது மனைவி அபிராமி (42). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று அபிராமி வீட்டின் மேல்புறம் உள்ள இரும்பு விட்டத்தில் இரும்பு கம்பியில் துவைத்த துணிகளை காயப்போடும்போது மின்சாரம் கசிந்து, துணி காயப்போடும் கம்பி வழியாக மின்சாரம் தாக்கியது. இதில் அபிராமி தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அபிராமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அபிராமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெகமம் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முகமது ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story